அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு நாளை முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று வழங்கப்படவுள்ளது எனப் பிரதிப் காவற்துறை அதிபர் காவற்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயணத் தடை நீக்கப்படும் வரை இந்த ஸ்டிக்கரைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்திய காவற்துறையின் பேச்சாளர் “பயணத் தடை நீடிக்கின்றது. அதனால் மக்கள் தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்த வாகனங்களுக்கு கடந்த வாரம், தினந்தோறும் விசேட ஸ்டிக்கர் ஒன்று வழங்கப்பட்டது.
நாளை 7ஆம் திகதி முதல் புதிய ஸ்டிக்கர் ஒன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த ஸ்டிக்கர் பயணத் தடைகள் தளர்த்தப்படும் வரை பயன்படுத்த முடியும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும்போது குறித்த இடத்தில் தாமதம் ஏற்படக்கூடும்.
இந்தத் தாமதம் நாளை மட்டுமே இருக்கும். எனினும் இனிவரும் நாட்களில் அந்த சிரமம் இருக்காது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களில் பயணிப்போர் நாளை சரியான தகவல்களைச் சோதனைச் சாவடிகளில் வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கடிதம் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவற்றை வழங்கி, விசேட ஸ்டிக்கரைப் பெற்றுக்கொண்ட பின்னர் இனிவரும் நாட்களில் இடையூறு இன்றி பணிகளுக்காகப் பயணிக்க முடியும்” – என்றார்.