யாழ்ப்பாணம் – உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மண் அகழ்வை தடுப்பதற்கான வேலையை நல்லூர் பிரதேச சபை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளது.
அரியாலை, உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தமாறு பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில். யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தப்படவேண்டுமென மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய மணல் அகழ்ந்து செல்லும் பாதையில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் பாரிய குழிகள் வெட்டப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்து செல்லப்படும் நடவடிக்கை இந்த பாதை தடுக்கப்பட்டதன் மூலம் பெருமளவு குறையுமென அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.