ஓட்டமாவடியில் மூன்று கிராமம் முடக்கம்!

01 6 1 1
01 6 1 1

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவசர கூட்டம் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

01 5 2

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொரோனா தொற்றினால் ஒரு மரணமும் இடம்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறித்த பகுதி மக்கள் தனிமைப்படுத்தலினை மீறாது வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

01 3 3

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, கும்புறுமூலை இராணுவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை கிடைக்கப்பட்டதன் பிரகாரம் 29 தொற்றாளர்கள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.