சிறுமி துஷ்பிரயோகம்- இருவரது விளக்கமறியல் நீடிப்பு

Judge saman
Judge saman

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை இருவரது விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை கண்டறிந்த ஆசிரியர் இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம் பிரசாதம் தர அழைப்பதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.

அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒருதொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுமியின் அலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகரும் சிறுமியின் சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

அன்றிலிருந்து சந்தேகநபர்கள் இருவரும் இன்று (டிசெ.20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தத போது சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள்.

சிறுமியின் வாக்குமூலமும் அவரது சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முதலாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, பிணை விண்ணப்பம் செய்ய மன்றின் அனுமதி கேட்டார். சிறுமியின் நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷும் தனது ஆட்சேபனையை முன்வைக்க மன்றின் அனுமதியைக் கோரினார்.

சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை மன்றுக்கு கிடைக்காததால் பிணை விண்ணப்பத்தை நிரந்தர நீதிவான் முன்னிலையில் முன்வைக்க அறிவுறுத்திய பதில் நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 30ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.