கடலில் காவியம் படைப்போம் என்றவர்கள் ஊழையிடுகின்றனர் – டக்ளஸ்

1273e71f devanada 1
1273e71f devanada 1

கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேருந்துகளை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் என்று கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பேருந்துகளையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்றிட்டம் தொடர்பில் சிலரினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையான முறையில் உருவாக்கும் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேருந்துகள் கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமுறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த 2017 ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கர் உடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.

இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.