முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில், சாரதிகளுக்கான விடுதி அமைக்கப்படவில்லை என, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில், நான்கு நிரந்தர சாரதிகள் உள்ளனரென்றும் இவர்களுக்கான விடுதி அமைக்கப்பட வேண்டும் என கடந்த பல வருடங்களாக வடமாகாண சுகாதார அமைச்சுக்கு வைத்தியசாலையின் நிர்வாகத்தால் கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டன எனவும் கூறினார்.
இவ்வாண்டும் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம், நிராகரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், சாரதிகள் நித்திரை விழித்து அவசர நோயாளர்களை பல்வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று, சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் திரும்பினால், ஓய்வு எடுப்பதற்கு விடுதி வசதிகள் இல்லை எனவும் கூறினார்.
‘இதனால் சாரதிகளுக்கான ஓய்வு விடுதி அமைக்கும் பணிகள் பல வருடங்களாக முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும், அவர் தெரிவித்தார்.