இந்தியா முயற்சி எடுக்கவில்லை ஆனந்தன் குற்றச்சாட்டு

IMG 3230
IMG 3230

போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முண்ணனியின் செயலாளர் பத்மநாபாவின் நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பத்மநாபாவையும் ஈழ விடுதலை போராட்டத்தினையும் எந்த ஒரு காலத்திலும் பிரித்துப்பார்க்க முடியாது. தமிழ்மக்கள் பாரிய இழப்புகளை சந்திக்க போகின்றார்கள் என்பதை 30 வருடத்திற்கு முன்பாகவே பத்மநாபா தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்திப்பட்டிருந்தால் தமிழ்மக்களிற்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை தடுத்திருக்கமுடியும். அதனை நடைமுறைப்படுத்துவதில் எங்களைத்தவிர ஏனைய தமிழ்த் தலைவர்கள் மிகப்பெரிய தவறிழைத்திருக்கின்றார்கள். இலங்கை அரசாங்கமும் பாரிய தவறிழைத்துள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைத்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் குறைந்த பட்சம் போருக்கு பின்னரனா இந்த 12 வருட காலப்பகுதியிலாவது மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் இந்தியா எடுக்கவில்லை.

இன்று மாகாண அரசில் இருக்கக்கூடிய எச்ச சொச்ச அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் செயற்பாட்டில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது. மாகாணப்பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழும் உள்ளீர்க்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

பல உயிர்த்தியாகங்களிற்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் அனைத்தும் பறித்தெடுக்கப்பட்டு வெறும் கோதாக இருக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்மக்கள் எதிர்காலத்தில் ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் முழு முயற்சியினை எடுக்கவேண்டும். என்றார்