யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு

250px Nallur Kandasamy front entrance
250px Nallur Kandasamy front entrance

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான பிரிவினரால் பெறப்பட்டது.

இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது, அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் மாறுபட்ட தகவல்களை வழங்கினர். விடுதி உரிமையாளரும் மாறுபட்ட தகவல்களை வழங்கினார். அதனால் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இளம் பெண்களும் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேக நபர்கள் ஆறு பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.