ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்

ransan
ransan

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டனையயை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்  அனுபவித்து வரும், கம்பஹா மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

கடந்த யூன் 19 ஆம் திகதி, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மருத்துவ பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

 அந்த பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், முழங்காலில் உள்ள உபாதைக்கு தங்கியிருந்து சிகிச்சைப் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

 அதற்கமையவே ரஞ்சன் ராமநாயக்க காலி, கராப்பிட்டிய வைத்தியசலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். அங்கு சிறைக்காவலர்களின் பொறுப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ ஆப்றூ தலைமையிலான நீதியர்சர்களான விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியர்சர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வௌியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்ப்ட்டுள்ளதால், குற்றவாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு  கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கும் தீர்ப்பை நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியர்சர் சிசிர டி ஆப்றூ அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு அமைய  இந்த 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக  அறிவித்திருந்தார்.

 இந் நிலையில் தற்போது, ரஞ்சன் ராமநாயக்க, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.