பூவரசங்குளம் பகுதியில் புதிய வீடொன்று கட்டி முடிக்கப்பட்டு சமுர்த்தி பயனாளியின் குடும்பத்திற்கு சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சமுர்த்தியின் ஒழுங்கமைப்பில் 6 இலட்சம் சமுர்த்தியினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன், நன்கொடையாளர்களின் உதவியுடனும் 20 இலட்சம் பெறுமதியான வீடொன்று கட்டப்பட்டு இன்று (01) காலை 10 மணியளவில் குறித்த சமுர்த்தி பயனாளியிடம் கலந்து கொண்ட அதிதிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய குலசிங்கம் திலீபன், சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி பத்மறஞ்சன், பிரதேச செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ,திட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.