வெளிநாட்டு சக்திகள் சீனாவை வதைக்கவோ அல்லது உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தவோ முயன்றால் ‘தலையில் தாக்கப்படும்’ என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இனத்போது ‘சீனாவுக்கு எதிரான பிரசாரங்களை’ ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த கருத்து அமெரிக்காவை நோக்கியதாக இருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஹொங்காங்கில் அதன் ஒடுக்குமுறை தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
வர்த்தகம், உளவு மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய காலங்களில் மோசமடைந்துள்ளன.
தாய்வானின் பிரச்சினையும் பதற்றத்திற்கான முக்கிய ஆதாரமாகும்.
தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கும்போது, பீஜிங் அதனை சீனாவில் இருந்து பிரிந்த மாகாணமாக கருதுகிறது.
இந்த நிலையில் சீன ஜனாதிபதி தமது உரையில், தாய்வானுடன் ஒன்றிணைவதற்கு சீனா ஒரு ‘அசைக்க முடியாத உறுதிப்பாட்டை’ பேணுகிறது என்று கூறியுள்ளார்.
‘சீன மக்கள் தங்கள் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான தீர்மானத்தையும் விருப்பத்தையும் திறனையும் எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று அவர் கூறினார்.