இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயால் ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் ஆய்வு

IMG 20210701 WA0035
IMG 20210701 WA0035

இலங்கையில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் சரக்கு கப்பலில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு கப்பலில் இருந்த பெட்டகங்கள் தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்தில் சரக்கு பெட்டகங்களில் இருந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இராசயன பொருட்கள் கடலில் கலந்ததால் இலங்கை கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமைகள், டால்பின் உள்ளிட்டவைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.

இலங்கையைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி வல்லுனர்கள் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கடல் மாசு இந்திய கடற்பரப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் 75 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த கணவாய், இறால், மீன்கள் உள்ளிட்டவைகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ரம்யா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களின் செதிகளில் எண்ணெய் மாதிரிகள் ஏதேனும் உள்ளதா அல்லது மீன் வாய்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதா என்றும் அதே போல் இறால்கள், நண்டுகளின் உருவ அமைப்பு நீளம், அகலம் உள்ளிட்டவைகள் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின் முடிவு குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக வும், இதுவரை நடத்திய ஆய்வில் இரசாயன கழிவுகள் ஏதும் தென்படவில்லை எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.