மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இணையதள வசதியற்ற பல்வேறு கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடையின்றி கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள ‘டெப்’ கணினிகளை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன், இணைய வசதியற்ற பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இணையவசதிகளை செய்துக்கொடுப்பதற்கான வழிமுறைகளும் செய்யப்பட்டு வருகின்ற சூழலில் பதுளை, பண்டாரவளை, பசறை, வெலிமடை உள்ளிட்ட கல்வி வலையகங்களில் காணப்படும் 27 பெருந்தோட்ட பாடசாலைகளில் முதல்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இவ்வாறு டெப் கணினிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி பாடசாலைகளுக்கு முதல் கட்டமாகவே இந்த டெப் கணினிகள் வழங்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் மேலும் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் டெப் கணினிகள் வழங்கப்படும்.
இணையவசதி இல்லாத பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு “ஒப்லைன் பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் கற்றலை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக பதிவுசெய்யப்பட்ட கற்கைகள் மூலம் கற்பதற்கான டிவி ஸ்க்கீரின்களும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.