15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் உட்பட 32 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்வதற்காக மேலும் 4 இணையதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் ஒரு இணையதளத்தை நடத்திச் சென்ற இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் இணையதளம் ஒன்றை நடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மாலைத்தீவு நாட்டவர் ஒருவர் மற்றும் அவர்களுக்கு அறை வழங்கிய ஹோட்டலின் முகாமையார் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் 12 பேர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.