சிறுமி விற்பனை தொடர்பில் மாலைத்தீவு முன்னாள் அமைச்சரும் கைது!

Mohamed Ashmalee
Mohamed Ashmalee

இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை, மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைதீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைதுசெய்தது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மாலி என இலங்கை காவல்துறையினருடன் உறுதிப்படுத்தியுள்ளதாக மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் இராஜாங்கம் அமைச்சர் எனக்கூறப்படும் நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.