பூபாலபிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுதலை!

P.Prashanthan 1
P.Prashanthan 1

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை அனுமதிக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பிணை கோரிய மனு நேற்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இரண்டு நீதியரசர்கள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் பிரசாந்தனுக்கு பிணை வழங்க அனுமதியளித்தது.

இதனடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் பிரசாந்தன் விடுதலை செய்யப்பட்டார்.