முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் உண்ணாப்பிலவு ஆதார மருத்துவமனையில் இன்று(8) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நான்காயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதற்கட்டமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் 1120 பேருக்கு கடந்த மூன்று நாட்கள் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன
தொடர்ந்து முல்லை வலயத்திற்குட்பட்ட ஆயிரத்து 600 ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(8) உண்ணா பிலவு ஆதார மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதன்போது முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மக்கள் மற்றும்ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு ஊசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இராணுவத்தினரும் இணைந்து இந்த தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது