ஏறாவூர் பற்று மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் 312 குடும்பங்களைச் சேர்ந்த 1072 பேர் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், வந்தாறுமூலை மேற்கில் 185 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 53 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் ரெஜி கலாசார மண்டபத்திலும், சந்திவெளி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து நீர்தேக்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளமையின் காரணமாக மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கான பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.