ஆலயங்களில் உற்சவங்கள் வழிபாடுகள் நடைபெற்றால் தான் நாட்டில் மக்களுக்கு நோய் நொடியில்லாத வாழ்வு கிடைக்கும். நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு அனைத்து இந்து ஆலயங்கள் சார்பிலும் இந்து மக்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவிப்பதாக பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிவாகம கலாநிதி அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ கு. நிமலேஸ்வரக் குருக்கள் பங்குபற்றலுடன் நேற்று (11) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மத வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடி வழிபட முடியாத சூழ்நிலையுடன் அரசாங்கம் சட்டம் ஒன்றினை பிறப்பித்திருந்தது. அந்த தருணத்தில் சர்வதேச இந்துமத குருபீடம் பல தடவைகள் ஆலயங்களில் பூஜைகள் நடைபெற வேண்டும். இவ்வாலயங்களில் உற்சவங்கள் வழிபாடுகள் நடைபெற்றால் தான் நாட்டில் மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்வு கிடைக்கும்.
நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் நன்மை கிடைக்கும் என்று பல தடவைகள் ஊடகங்களில் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆலயங்களுக்கு 100 அடியவர்களாவது அனுமதிக்கப்பட வேண்டும் என பல தடவைகள் கூட வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆலயங்கள் மத வழிபாட்டு தலங்களில் வழமையான முறையில் வழிபாடுகளில் கலந்து கொள்ளலாம் என அரசாங்கமும் சுகாதார துறையினரும் அனுமதி அளித்திருக்கின்றது.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், சுகாதார பிரிவிற்கும், பாதுகாப்பு அமைச்சிற்கும் சர்வதேச இந்துமத குருபீடத்தின் சார்பிலும் இலங்கை வாழ் அனைத்து இந்து ஆலயங்கள் சார்பிலும் இந்து மக்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது என்றார்.