வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தலைவர் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பட்டதாரி நியமனங்களின் போதும் பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என பிரிக்கப்பட்டமையினால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது அதிகளவில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பட்டதாரிகளை அவ்வாறு பாகுபடுத்தாமல் அனைவருக்கும் நியமனங்கள் முறையாக வழங்கப்பட்ட வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது 10000 இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ள நியமனத்தில் தமக்கு எதுவித ஆட்சேபனைகளும் இல்லை எனவும் ஆயினும் பட்டதாரிகளுக்கான நியமனங்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆகவே இந்த நடவடிக்கைகள் உரிய வகையில் நடைபெற வேண்டும் என்பதுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.