நாட்டில் உள்ள அனைவரினதும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கு அமைவாக புதிய செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த செயற்திட்டத்தின் கீழ் ஒருலட்ச்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஒன்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் கீழ் கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்திப் பெற தவறிய 15 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளனர்.
இதேவேளை இவர்கள் 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சம்பளத்துடன் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதுடன், நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.
இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர்சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மேலும் இவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் தொழிலில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.