மன்னார் காவல்துறை பிரிவில் உள்ள 6 இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (16) காலை மன்னாருக்கு விஜயம் செய்து மன்னார் புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை நேரம் மன்னார் பகுதியில் அமைந்துள்ள 6 கத்தோலிக்க ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தையும், ஏற்பட்ட சேதத்தையும் கவிந்த ஜெயவர்தன அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாருடன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள உரிய காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.