வட மாகாணத்தில் 11800 பேருக்கு தொற்று, 164 பேர் உயிரிழப்பு – ஆ.கேதீஸ்வரன்

1615613355536 2
1615613355536 2

இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில்
11800 பேர் தொற்றுக்குள்ளானதுடன் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்-19 நிலவரம் என்பது கடந்த ஜனவரி மாதம் முதல் தொற்று படிப்படியாக ஆரம்பித்து யூன் மாதத்தில் 3594 என அதிகூடிய தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனம்காணப்பட்டனர்.

அதற்குப் பின்னர் யூலை மாதத்தில் அந்தப் பரம்பல் குறைவடைந்து தற்போது வரை 2241 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டனர். அவற்றில் யாழ்ப்பாணத்தில் 1549 பேரும் வவுனியாவில் 176 பேரும் மன்னாரில் 168 பேரும் கிளிநொச்சியில் 220 பேரும் முல்லைத்தீவில் 128 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11800 பேர் தொற்றுக்குள்ளாயினர்.

அதில் யாழ்ப்பாணத்தில் 7025 பேரும் வவுனியாவில் 1607 பேரும் மன்னாரில் 977பேரும் கிளிநொச்சியில் 1215 பேரும் முல்லைத்தீவில் 876 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாவினால் தற்போதுவரை வட மாகாணத்தில் 164 பேர் உயிரிழந்தனர். அதில் யாழ்ப்பாணத்தில் 122 பேரும் வவுனியாவில் 23 பேரும் மன்னாரில் 8பேரும் கிளிநொச்சியில் 4 பேரும் முல்லைத்தீவில் 7 பேரும் உயிரிழந்தனர்.

சில வாரத்துக்கு முன்பு கொரோனா சம்பந்தமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதற்கு பின்னர் குறிப்பாக இந்து ஆலயங்களில் பெருமளவான சுகாதார நடைமுறையை மீறி திருவிழாக்கள் நடைபெற்றன. அதற்குப் பின்னர் கொரோனா கொத்தணி பல இடங்களில் உருவாகி இருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்கூட கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவுக்கு பின்னர் 49 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை பின்பற்றி கொண்டு ஆலயங்களில் ஆகக்கூடியது நூறு பேர்தான் கூட முடியும். உள் பிராகாரத்தில் மட்டுமே திருவிழாவை நடத்த முடியும். அந்த நூறு பேர் என்பது கூடஇடவசதி சமூக இடைவெளியோடு இருக்குமா என்பதை பொறுத்தே தீர்மானிக்க முடியும். அது தொடர்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி இருக்கவேண்டும். ஆலய வெளி வீதிகளில் எந்தவிதமான திருவிழாக்கள் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. திருவிழாக்களின்போது அன்னதானம் வழங்கவோ, தண்ணீர்பந்தல் அமைக்கவோ நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவோ தற்போது அனுமதி கிடையாது.

டெல்டா தொற்று பரவலடைந்து வரும் நேரத்தில் தேவையற்ற விழாக்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக நாங்கள் விரைவில் அறிவித்தலை வெளியிடவுள்ளோம். இதேபோன்று திருமணம்,பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழாக்களை மண்டபங்களிலோ அல்லது தங்களது வீடுகளிலோ நடத்துவது தொடர்பிலோ சுகாதார வைத்திய அதிகாரியினுடைய அனுமதி வேண்டும். மண்டபங்களின் இடவசதிக்கேற்ப சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.இவற்றை சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பர் என்றார்.