அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே ரிஷாட் பதியுதீன் மீது பழி சுமத்துகின்றது-நகரசபை உறுப்பினர் லறீப்

IMG 20210805 083717
IMG 20210805 083717

அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே ரிஷாட் பதியுதீன் மீது பழி சுமத்துகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய வவுனியா நகர சபை உறுப்பினர் ஏ. ஆர். எம். லறீப் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எந்தவித குற்றமும் செய்யாமல் ஏப்ரல் 24ம் திகதி நடுநிசியில் எமது கட்சியின் தலைவரை கைது செய்து விட்டு குற்றம் நிருபிக்கப்படாத நிலையில் இன்று போலிக்குற்றச்சாட்டுகளை தேடித்திரியும் அரசாங்கம் பல போலிக்குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விடும் நிலைமையில் இன்றும் ரிஷாட் இல்லம் தொடர்பில் போலி செய்தி வெளியிட்ட காவற்துறை தரப்பின் மற்றுமொரு போலி தகவல் அம்பலமாகியுள்ளது


இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகமான போலிக் குற்றச்சாட்டுக்களை கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மீது, தற்போதைய காலகட்டத்தில், அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட “ஹிஷாலினி” தொடர்பிலும், நாளுக்கு நாள் போலிச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் 02ஆம் திகதி காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், 29 வயதான பெண் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரை, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த பெண்ணை, காவற்துறை தரப்பினர், ரிஷாட் பதியுதீன் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவர் வீட்டின் வெளிப்புறங்களை சுட்டிக்காட்டி, விசாரணைகளை மேற்கொள்வது போன்று, பெரிய சித்தரிப்பைக் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

ஆனால், இது சம்பந்தமாக பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. குறித்த பெண், அந்த வீட்டில் வேலை செய்ததுமில்லை. குறித்த பெண் சாட்சியத்தை போலியாக உருவாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. 
குறித்த யுவதி, 2009 – 2010 ஆம் ஆண்டுகளில், அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக தெரிவித்து, ரிஷாட் பதியுதீன் தற்போது வசிக்கும் இல்லத்தை அடையாளம் காட்டுகின்றார். 

ஆனால், குறித்த காலப்பகுதியில் ரிஷாட் பதியுதீனோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர்களோ, அந்த பெண் தற்போது அடையாளம் காட்டிய இல்லத்தில் வசிக்கவோ, அவர்கள் அங்கு குடியேறவோ இல்லை என்பது ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் ரிஷாட் பதியுதீன் அவ் வீட்டில் குடியேறாத நிலையில், இவ்வாறு போலியான தகவல்களை வெளியிடுவதானது எந்த வகையில் நியாயம்? 

ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினர், குறித்த பெண்ணை அடையாளம் காட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவற்துறை தரப்பிடம், “இந்தப் பெண் எங்கள் இல்லத்தில் வேலை செய்யவில்லை” என்று தெளிவாகக் கூறியும்,காவற்துறை ஊடகப் பேச்சாளர், யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் இவ்வாறான செய்திகளை, உறுதியான செய்திபோல், பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடுவதானது மிகவும் கவலையான விடயமாகும். 

இந்த நிலையில், ரிஷாட் பதியுதீன் தொடர்பில், திட்டமிட்ட வகையில், செய்திகளை பிரசுரிப்பதும், ஆதாரங்கள் அற்ற குறித்த செய்திகளை சிங்கள ஊடகங்கள் மும்முரம் காட்டி வெளியிடுவதுமாக, அவருக்கு எதிராக பாரிய சதித் திட்டமொன்று திரை மறைவில் அரங்கேறி வருகின்றது.

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் நடந்த இந்த தற்கொலை சம்பவத்தை வைத்து, நாட்டில் தற்போது நிலவும் அநேகமான பிரச்சினைகள், அரசாங்கத்தின் இயலாமைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
இந்த நாட்டின், முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலாக செயற்பட்ட தலைவர்களில் ரிஷாட் முக்கியமானவர். தொடர்ந்தும் செயற்படுபவர். அதற்கு மாற்றுக்கருத்தில்லை. அவர் மீது இவ்வளவு ஆவேசத்தை, இந்த அரசு கொட்டித் தீர்த்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்குவதை, முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதே யதார்த்தம். 

ரிஷாட்டின் கைது, 90 நாட்களைக் கடந்தும், இன்னும் நீதி நிலைநாட்டப்படாமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, அவரின் மனைவி உட்பட குடும்பத்தினரையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்வது, எம்மை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்ரோத்து அரசியல் செய்கின்ற சில அரசியல் வாதிகள் கூட இவ்விடயத்தை வைத்து அரசியல் செய்யும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

திரை மறைவில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து தங்களது இயலாமையை சாதகமாக்க முயற்சி செய்யும் அரசியல் வாதிகளிடம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றேன் , 
அண்ணனும் தம்பியுமாக வாழும் எங்களை எவராலும் எந்த சக்தியினாலும் பிரிக்க முடியாது அந்த முயற்சியை கைவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் .

இறைவன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம். தாமதமாகிலும் நீதியும், உண்மையும் என்றோ ஒரு நாள் வெல்லும் என்ற இறைவன் மீது அதி தீவிர நம்பிக்கை எமக்குண்டு வெகுவிரைவில் உண்மை வெளிவரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றார்