கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடும் என்று நினைத்து வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதை தவிர்ப்பதால் உயிரிழக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை தலைவர் வைத்தியர் எஸ்.மதிவாணம் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்டா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆகவே நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். தங்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடும் என்று நினைத்து வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதை தவிர்ப்பதால் உயிரிழக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. இனியும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நாங்கள் கொரோனா நெருக்கடியிலும் ஏனைய நோய்களுக்கான சிகிச்சைகளையும் வழங்கியே வருகிறோம்.
மருத்துவத்துறைக்குள் பல தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருந்தாலும் கூட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டினுடைய நிலைமையை கருத்திற்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் தற்போது இறங்கவில்லை என்றார்.