அரசினால் வழங்கப்பட்டுள்ள காணிகளில் குடியிருப்போருக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்கும்போது அந்தக் காணிகளுக்கான உரிமை இன்மை காரணமாக நீர் இணைப்பு கட்டணத்துக்கு மேலதிகமாக அறவிடப்படும் கட்டணத்தை இரத்துச்செய்ய நீர்வழங்கல் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நீர்வழங்கல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
புதிய நீர் இணைப்புக்களை வழங்கும்போது அந்தக் காணிகளுக்கான உரிமை இன்மை காரணமாக நீர் இணைப்பு கட்டணத்துக்கு மேலதிகமாக 1,500 ரூபா அறவிடப்படுகின்றது.
பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் பத்திரத்தில் உரிமையின்றி குடியிருப்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் இருந்து இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுகின்றது.
இதுதொடர்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களினால் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு, புதிய நீர் இணைப்புக்களை வழங்கும்போது உரிமை இன்றி குடியிருப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் 1500 ரூபாய் மேலதிக கட்டணத்தை நீக்குவதற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன் இந்த மேலதிக கட்டணத்தை நீக்கும் சுற்று நிரூபத்தை கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் செயற்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.