மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14வது நினைவுதினம் (Dec.25) இன்று அனுட்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ,முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
2005ஆம்ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.