நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து அஜித் நிவாட் கப்ரால் விலகவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்காக அவரை மீண்டும் நியமிக்க மேற்கொண்டுள்ள யோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் செய்தி சேவை ஒன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், அவ்வாறான யோசனை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை தாம் நிராகரிக்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ராலை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆளும் கட்சியிடம் இன்று நாடாளுமன்றில் வைத்து வினவியிருந்தார்.
சபாநாயகரின் குறுக்கீட்டுக்கு அமைய அதற்கான உரிய பதில் ஆளும் கட்சியிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.