அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதாக அதன் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா நகரில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார். அது தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் நாளை இடம்பெறவுள்ளது.