தேசிய ரீதியில் நடைபெற்ற பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பிரதமரும், புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பரகும்பா வித்தியாலயத்தில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டின் 22 மாவட்டங்களிலும் உள்ள பிரிவேனா பாடசாலைகள் மற்றும் பௌத்த பாடசாலைகள் என்பவற்றில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நடைபெற்ற தேசிய பௌத்த கலாசார பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் புத்தசாசன அமைச்சரும், பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட ரீதியில் முதல்நிலை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதி பொலிஸ்மா அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பௌத்த மதகுருமார், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரிவேனா கல்வி நிலைய ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.