இரத்தினபுரி – கஹவத்தை வைத்தியசாலையில் உயிரிழந்த 6 வயது சிறுமி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மரணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் சன்ன பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சிறுமி மரணித்தமை தொடர்பிலான காரணி இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 வயதான குறித்த சிறுமி அண்மையில் இரத்தினபுரி – கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அவருக்கு வேறு எந்த நாட்பட்ட நோய்களும் ஏற்பட்டிருக்காமையினால், அவரது சரீரம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.