ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பிற்குள் இணக்கம்!

mavai 1
mavai 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கத்தை அடைந்திருப்பதாகத்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஆராய்ந்து எதிர்வரும் 3 ஆம் திகதி இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டமைப்பிள் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராசா கருத்து தெரிவிக்கையில்..

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தத்தமது கோரிக்கைகள் அல்லது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.

கூட்டமைப்பிலுள்ள இந்த மூன்று கட்சிகளுக்குமான ஆசனப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். தேர்தலில் ஒவ்வொரு மாவட்டமாக எத்தனை வேட்பாளர்கள், எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை வேட்பாளர்கள் ஒதுக்குவது என்பதைப் பற்றி நாங்கள் ஆராய்ந்தோம்.

அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு. அம்பாறை போன்ற இடங்களில் ஆசனங்களை அதாவது வேட்பாளர்களை ஒதுக்குவது தொடர்பாக நாங்கள் பெரும்பாலும் ஒரு இணக்கத்தை அடைந்திருக்கின்றோம். அந்த இணக்கத்தின் அடிப்படையில் பெரும்பாலும் திருப்தியான இணக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அந்த அடிப்படையில் மீண்டும் 3 ஆம் திகதி கொழும்பிலே நாங்கள் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்க வாய்ப்பிருக்கின்றது. எல்லோரும் சிறந்த முறையில் தங்களது கருத்தக்களை முன்வைத்திருக்கிறார்கள். அதனால் சிறந்த முறையில் தீர்மானம் எடுப்பதற்கு அடித்தளமிடப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் நாங்கள் வெற்றிகரமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாங்கள் ஒன்றாக நின்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான பேச்சுக்களில் வலு முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,
உள்ளிட்ட கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.