பத்திரிகை ஆசிரியர் உட்பட ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் அதற்கு அமைவாக செயற்படாதமை தொடர்பில், உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால், காவல்துறைமா அதிபருக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளைப்பூண்டு மோசடி குறித்த தகவல்களை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.
ஊடகவியலாளர்களை விசாரணைக்காக அழைக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சில ஊடக நிறுவனங்களுக்கு சென்றுள்ளதாகவும், இதற்கமையவே, அது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும் விடய பரப்புக்கு பொறுப்பான அமைச்சர், காவல்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.