வடக்கு மாகாணத்தில் இன்று வரை 753 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்தில் இன்று வரை 36,356 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இதிலே ஆகஸ்ட் மாதத்தில்14,634 பேரும் செப்டம்பர் மாத ஆரம்பத்திலிருந்து இன்றுவரை 9,186 பேரும் தொற்றாளராக இனங்காணப்பட்டனர்.
இதேபோன்று இறப்புகளை எடுத்து பார்த்தால் இன்றுவரை 753 இறப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 228 இறப்புகளும் செப்டம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 344 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஏனைய மாவட்டங்களை போல வடக்கு மாகாணத்திலும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரை இறப்புகளும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது.இந்த காலப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வற்கு இடர் நிலை காணப்பட்டது இந்த காலப்பகுதியில் 101 உடலங்களை மின் தகனத்திற்காக வெளி மாவட்டத்திற்கு அனுப்பியிருந்தோம்.
தற்போது அந்த நிலைமை மாறி இருக்கின்றது. செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்புக்கள் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது வடக்கு மாகாணத்திலேயே இங்குள்ள சடலங்களை தகனம் செய்ய கூடியதாக நிலை காணப்படுகின்றது.
எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்று கூடினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே பொதுமக்கள் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் ஒன்று கூடாது சமூக இடைவெளியை பின்பற்றி செயற்பட வேண்டும் பொது நிகழ்வுகளை வைபவங்களை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. இந்த நோய்த் தொற்றானது பூரணமான கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை இந்த செயல்பாட்டினை தொடர்ந்து செயற்படுத்துவது சிறந்தது. தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் என்றார்.