தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் தரம் தொடர்பில் பூரண விசாரணை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவைச் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் பிறப்பிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளான கட்டுநாயக்க விமான நிலையம், வான் சேவைகள் நிறுவனம் மற்றும் அதன் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி தமது மனைவியுடன் டுபாய் நோக்கிச் செல்வதற்காக 2 தனியார் வைத்தியசாலைகளில் 4 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அறிக்கை ஒன்றுக்கு ஒன்று முரணான பெறுபேற்றை வெளிப்படுத்தியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாகத் தமக்கு தேவையற்ற செலவீனம் ஏற்பட்டதாக அவர், அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தமது வியாபார நடவடிக்கைகளில் நட்டம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டிய மனுதாரர் அதற்காக பிரதிவாதிகளிடம் இருந்து 100 இலட்சம் ரூபா நட்டஈட்டை அறவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.