கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை வரும் விமானங்களில் வருகைத் தரக்கூடிய அதிகபட்ச பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
கொவிட் பரவல் ஆரம்பத்துடன் நாட்டுக்கு வருகை தரும் விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் ஏனைய பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.