ரணிலுடன் நடைபெற்ற சந்திப்பு – சஜித் கருத்து

ranil sajith 1
ranil sajith 1

தமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக கடந்த இரவு அமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்ற நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.