மலேசியாவுடனான கூட்டுப்பங்காண்மை குறித்து இலங்கை அவதானம்!

WhatsApp Image 2021 10 15 at 2.09.26 PM
WhatsApp Image 2021 10 15 at 2.09.26 PM

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் நன்மைகளைத் தரக்கூடிய துறைகளில் ஒருங்கிணைப்புக்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு கூட்டுப்பங்காண்மையையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்புடனான இருதரப்பு உறவுகள் நினைவுகூரப்பட்டன.

கொவிட்-19 தொற்றுக்கு பிந்திய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவினை மேலும் விரிவாக்குவதற்கான வழிவகைகள் தொடர்பில் இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

1957 இல் மலேசியா சுதந்திரம் பெற்றமையை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை இருந்ததையும், 2017 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆவது இராஜதந்திர உறவுகளின் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களையும் பற்றிக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், விமான இணைப்புகளை முழு அளவில் புதுப்பித்தல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வலுவான ஊடாடல்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுப்பங்காண்மைகளை மீள அமைப்பதற்கான தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய துறைகளில் ஒருங்கிணைப்புக்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு கூட்டுப்பங்காண்மையையும் சுட்டிக்காட்டினார்.

இலத்திரனியல் மயமாக்கல் துறையில் மலேசியாவில் பாரிய முன்னேற்றம் குறித்து அமைச்சர் பாராட்டினார். அரச துறையில் நிர்வாகம், நீதிமன்ற வழக்குகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரதான துறைகளில் வேகமான முன்னேற்றத்தை அடைவதற்குரிய ஒரு பகுதியாக இலத்திரனியல் மயமாக்கலை அவர் இனங்காட்டினார்.

இத்துறையின் மீதான மலேசியாவின் அனுபவங்களை அறிந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிப்படுத்திய அமைச்சர், இந்நாட்டின் தேவைகளுக்கேற்ப அதிலுள்ள சில அம்சங்களைத் தழுவிக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின்போது மலேசிய பல்கலைக்கழகங்கள் தமது மாணவர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயராமலேயே உயர்கல்வியைத் தொடரும் வண்ணம் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கற்கை நெறிகளை வழங்கும் மலேசியாவின் கல்வி முறையை அமைச்சர் பாராட்டினார்.

இலங்கையின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் போதுமான உட்கட்டுமானங்கள் இல்லாமையைக் சுட்டிக்காட்டிய அமைச்சர், தொழிற்பயிற்சியின் விரிவாக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் மேம்பாட்டை எட்டக்கூடிய துறையாக அடையாளம் காட்டினார்.