கட்டுகஸ்தோட்டையில் சிறைச்சாலை அதிகாரியையும் அவரது மகனையும் ஆயுதம் ஒன்றினால் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் மோதலாக மாறியதையடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.