வீதியில் வைத்து இளைஞரைத் தாக்கிய காவல்துறை அதிகாரி!

police1
police1

சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு எதிராக விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர், இளைஞர் ஒருவரை சுற்றி இருந்து அவரை தாக்கும் வண்ணமான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் அதனை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்ததாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இரத்னபுரி – கிரி எல்ல வீதியில் இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை இரத்தினபுரி – கிரியல்ல வீதியில், பின்னால் வந்த கார் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது காரில் பயணித்ததாக கூறப்படும் இளைஞனுக்கு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி, காவல்துறை ஜீப் வண்டியின் பின் பக்கமாக உள்ள பகுதியில் வைத்து கடுமையாக தாக்குவது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அபாயகரமாக வாகனம் செலுத்தியதாக குறித்த சாரதியை கழுத்தினால் பிடித்து காவல்துறை ஜீப் வண்டியை நோக்கி இழுத்து வந்து தாக்குவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின், மோசமான நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.