அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தப்படாமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அதனை எதிர்க்கும் அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் , அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய முதலாவது நபர் நான் ஆவேன். 40 வருடங்களுக்கும் அதிக அரசியல் அனுபவத்தின் ஊடாகவே நான் அதைக் கூறினேன். குறைந்தபட்சம் பிரதேசசபை உறுப்பினராகக் கூட சேவையாற்றிய அனுபவம் கூட அற்ற அவரால் எவ்வாறு நாட்டை முறையாக நிர்வகிக்க முடியும்? அன்று என்னை தூற்றிய மக்கள் இன்று நான் கூறியது சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.