வெடுக்கு நாறிமலையில் பௌத்த விகாரையின் சிதைவுகளே உள்ளது – அனுர மனதுங்க

IMG 5927
IMG 5927

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்றவகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. முன்னர் பௌத்தவிகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று (04) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நெடுங்கேணி வெடுக்குநாறி மலைதொடர்பான விடயம் நீதிமன்றில் இருக்கின்றது. எனவே அந்த பிரச்சனையில் நாம் ஏனைய பணிகளை செய்யமுடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. ஆயினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கிகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம். ஆனால் அதிலும் சில இடஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று நாங்கள் சொல்லவேண்டும். குறிப்பாக அண்மைக்காலாமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் அங்கு பூசைகள் இடம்பெற்றுவருவதாக எம்மால் அறியமுடிகின்றது. இதற்கு முன்னர் பௌத்தவிகாரைகளின் சிதைவுகள் அங்கு காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது ஒரு முக்கியத்துவமான பிரச்சனை என்றவகையில் இனங்களிற்கிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாத வகையில் ஐக்கியத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் இந்த விடயத்தை பார்க்கவேண்டும். அந்த வகையில் இது தொடர்பில் அவதானம் எடுத்து பொதுமக்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒழுங்குகளை நாம் செய்வோம். 

இலங்கையில் எந்த ஒரு பிரதேசத்திற்கும் சென்று குடியிருப்பதற்கான தகுதி ஒவ்வொரு நபருக்கும் இருக்கின்றது. அதில் எந்தத்தடையும் இல்லை. இங்கு முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகள் மூலம் பௌத்தவிகாரை இருந்திருப்பதற்கான எச்சங்களை நாம் காண்கின்றோம். அதேபோல இந்து சமயத்திற்குரிய சில விடயங்களையும் அங்கு காண்கின்றோம். இலங்கையில் பௌத்த விகாரைகள் அமையப்பெற்றுள்ள இடங்களில் இந்துக்கடவுள்களுக்கான பூசைகளும் இடம்பெற்றுவருவதை அனைவரும் அறிவீர்கள்.

 எனவே அவ்வாறு இன ஐக்கியத்தோடு இருக்கும் நடைமுறைகளையும், செயற்ப்பாட்டையும் எதிர்காலத்தில் நாங்கள் ஏற்பாடுசெய்வோம். அந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதனை தடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அடாத்தான கட்டிட நிர்மாணங்கள் அங்கு ஏற்ப்படுத்தப்படுகின்றமை தடைசெய்யப்படவேண்டிய ஒரு விடயம். 

அத்துடன் அந்தப்பிரதேசத்தில் இருக்கக்கூடிய புராதன சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக தொல்பொருட்திணைக்களம் என்றவகையில் அந்த பொறுப்பு எமக்கிருக்கின்றது. அதற்காகவே இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றவே தவிர இனிவரும் காலங்களில் முழுமையான ஏற்பாடுகளும் சீர்செய்யப்படும் என்றார்.