வெலிசர பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் நேற்று (04) காலை கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும், மகிழுந்து ஒன்றையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது.
விபத்தில் உந்துருளியொன்றில் பயணித்த மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான அதிசொகுசு மகிழுந்தை செலுத்தியதாகக் கூறப்படும் 16 வயது மாணவர் மஹபாகே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், வர்த்தகரான குறித்த மாணவரின் தந்தையும் கைதுசெய்யப்பட்டார்.
கைதான இருவரும் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.