மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு மங்களராம விகாரையின் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
அத்துடன் முற்றுகையிட்ட தேரரை வெளியேற்றக் கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் உள்ள பன்சலகல விகாரைக்கு முன்னால் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை அகற்றி தமக்கு குறித்த காணிகளை வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் தேரர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த காணிப்பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கீழ் உள்ளதென பிரதேச செயலாளர் தெரிவித்தமையை கண்டித்து தேரர் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் குறித்த காணியை தமக்கு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தேரரை அங்கிருந்து வெளியேறக்கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமையை அடுத்து குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளும் தாமதமடைந்துள்ளது.
அதற்கமைய, காவல்துறையினர் அம்பிட்டிய சுமனரத்ன தேரருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.