எரிவாயு தட்டுப்பாடு: பாரவூர்தியை மறித்து பெண் ஆர்ப்பாட்டம்!

petrol 1 720x450 1
petrol 1 720x450 1

நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வேளையில், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தமக்கு எரிவாயு வழங்கப்படவில்லை எனக் கூறி பெண் ஒருவர் எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியொன்றை வழிமறித்து, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக குறித்த பெண் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேவைக்கு ஏற்பட்ட எரிவாயு கொள்கலன் கையிருப்பு இல்லை என்று எரிவாயு விநியோக நிலைய உரிமையாளர் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

பின்னர் குறித்த பெண் எரிவாயு ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வழிமறித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவ்விடத்துக்கு வாத்துவ காவல்துறை அதிகாரிகள் விரைந்திருந்த நிலையில், எரிவாயு விநியோக முகவர், அந்த பெண்ணுக்கு எரிவாயு வழங்குவதாக உறுதி வழங்கியதன் பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தார்.

மேலும், நேற்றைய தினம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்காவது மூட வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த பின்னணியில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

எவ்வாறாயினும், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.