வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் மேற்பிரிவை சேர்ந்த சரத் குமாரன் என்ற 20 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேற்படி நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றவர்கள், அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட கைப்பேசி மற்றும் பாதணிகள் இருப்பதனை கண்டு, அது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினரால் சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த கைப்பேசி மற்றும் பாதணிகளை இனம்கண்ட, இளைஞனின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது டிக்கோயா பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.