மாங்குளம் காவல்துறையினர் மூலம் மாவீரர் நிகழ்வுகளுக்கு 09 பேருக்கு நீதிமன்றால் தடை!

kpnk
kpnk

மாங்குளம் காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 09 பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் ஒன்பது பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 27 ம் திகதி வரை தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான தடையுத்தரவை மாங்குளம் காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் மாங்குளம் காவல்துறையினரினால் இன்று மாங்குளம்  நீதிமன்றில் ஏஆர்/872/21 வழக்கினூடாக மாங்குளம் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன், குஞ்சிதபாதம் ரவீந்திரன், ராசமணி சிவராசா, மகாதேவன் ஆனந்த், சுப்பிரமணியம் பரமானந்தம் உள்ளிட்ட ஒன்பது பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.