செங்கலடி தாக்குதல் சம்பவம் தொடர்பில் வியாழேந்திரன் மறுப்பு

amal
amal

செங்கலடி பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன்னையும் தொடர்புபடுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையில்:

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியின் அடிப்படையில் பொலிஸாரிடம் விசாரணையினை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய பொலிஸார் செயற்படுகின்றனர்.

நான் அறிந்த வரையில் ஒரு தரப்பினர் முதலில் அடுத்த தரப்பினர் மீது வெடி கொளுத்தி போட மற்றைய தரப்பினர் கண்ணாடியை உடைத்ததாக அறிகின்றேன். இதனை வைத்துக்கொண்டு என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியலாக்க முற்படுகின்றனர்.

தவறு இழைத்தவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன்.

ஆனால் இவர்கள் போன்றவர்களின் கருத்தானது என் மீது உள்ள தனிப்பட்ட முரண்பாட்டினால் பல நாள் காத்திருந்து கிடைத்த சந்தர்ப்பத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது போல் உள்ளது.

இத்தகைய என்மீது சேறு பூசும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். தொடரும் பட்சத்தில் இந்த போலித்தனமான கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நான் பின் நிற்கப் போவதில்லை.

உங்களுடன் யாராவது உரசினால் அவர்களுடன் உரசுங்கள். என் பெயரை இழுப்பது உங்கள் இயலாமையின் வெளிப்பாடோ என எண்ணத் தோன்றுகிறது. தயவு செய்து தங்களது அரசியல் வங்குரோத்து நிலைக்கு இதனை பயன்படுத்தி கொள்வதை நிறுத்துங்கள்.

இந்த சம்பவத்திற்கும் எங்களது அரசியல் செயற்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சமயத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டம் தனது கடமையைச் செய்யும்.

இதனை வைத்து யாரும் அரசியல் செய்ய முயன்றால் அல்லது இதனை வைத்து எதிர்க் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க நினைப்பது அவர் அவர் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுவதாக அமையும்” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இது குறித்த முறைப்பாடு மீள பெற்றுக்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இது தொடர்பிலான செய்தி தமிழ்க்குரலினூடாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,