மூன்றாவது நாளாகவும் தொடரும் இ.மி.சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்

image bbd8a1e716
image bbd8a1e716

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ‘சட்டப்படி வேலை செய்யும்’ தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் இன்று(27) தொடர்கின்றது.

தங்களது தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சௌமய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வரமுடியாத நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கெரவலப்பிட்டி – யுகதனவி மின்னிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு நேற்றைய தினம், மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியன்த ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் கொண்ட ஆயம் முன்னிலையில் ஆராயப்படவுள்ளது.