தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம், வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் வழிநடத்தலில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து மேற்கொண்டு முல்லைத்தீவு சந்தைக்கு முன்பாக மக்கள் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்
ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம்(03) குறித்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது
10ஆம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மீனவர் நலன் தொடர்பாகவும் அரசியல் கொள்கைகள் / யாப்புக்களில் மீனவர் நலன் தொடர்பாக கரிசனை செலுத்தப்பட வேண்டும் என்பவற்றை முன்னிறுத்தி இலங்கை நீதிமன்றத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற இழுவைப் படகு மீன்பிடிக்கு எதிராக இருக்கின்ற சட்டத்தினை நடைமுறைப்படுத்த இந்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதி/ சட்டமா அதிபர்/ கடற்றொழில் அமைச்சர் அவர்களே இழுவை மீன்பிடி தொழில் தொடர்பாக 2017 இலக்கம் 11 சட்டம் மற்றும் 2018 இலக்கம் 01 வெளிநாட்டுப் படகுகள் கண்காணிப்புச் சட்டம் ஆகியவைகளை நடைமுறைப்படுத்தி இந்திய இழுவை மடிகள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்
வெளிநாட்டுப் படகுகள் சட்டவிரோத முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மேற்கொள்கின்ற அழிவுகள் தடுக்கப்பட வேண்டும்.
எமது எல்லை மற்றும் வளங்களை பாதுகாப்பதற்காக எமக்குள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எமது வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுகின்ற மக்கள் அரசியல் யாப்புக்காக ஒன்றிணைவோம்
ஆகிய கருத்துக்களை முன்னிறுத்தி இடம்பெற்ற இந்த கையொப்பசேகரிப்பு நடவடிக்கைக்கு அரசியல் பிரமுகர்கள் மீனவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கையொப்பமிட்டு இந்த நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது